செய்திகள்
வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:
பெண்ணாடம் அருகே எறையூரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் மகன் ஆனந்தன் (வயது 26). இவரது மோட்டார் சைக்கிளை உறவினரான வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்த கோவரத்தினம் மகன் சந்திரசேகர் (35) என்பவர் தனது சொந்த வேலைக்காக வேப்பூருக்கு எடுத்து சென்றுள்ளார். அங்கு கூட்டுரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தனது நண்பர்களுடன் டீ குடிக்க அருகில் இருந்த கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்றது தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சுரேஷ் (32) என்பதும், இவர் சந்திரசேகர் நிறுத்திவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்தனர்.