செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூர் நகராட்சி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த 9 துணை கலெக்டர்கள் நியமனம்

Published On 2020-06-16 12:21 IST   |   Update On 2020-06-16 12:21:00 IST
கடலூர் நகராட்சி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த 9 துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து பரிசோதனை செய்ய உள்ளதாகவும் கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 550-யை தாண்டி விட்டது. இருப்பினும் சென்னையில் இருந்து வருவோரால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலர் இ-பாஸ் இல்லாமலும் வருகிறார்கள்.

அவர்களை கண்டறிய அதிகாரிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் நகரப்பகுதிக்குள் வருவோர் யாருக்கும் தெரியாமல் இருக்கிறார்கள். இவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது பற்றி மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வருவோரால் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி கடலூர் நகராட்சி பகுதிக்கு வருவோரை கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளோம்.

கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. அதில் 5 வார்டுக்கு ஒரு துணை கலெக்டர் வீதம் 9 துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் கிருமி நாசினி தெளித்தல், பிளச்சிங் பவுடர் போடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு, ஆய்வு செய்வார்கள்.

மேலும் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து, காய்ச்சல், இருமல், சளி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வார்கள். இது தவிர 50 வீடுகளுக்கு ஒரு செவிலியர் வீதம் நியமிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிசோதனை செய்ய உள்ளார்கள்.

வெளியூர்களில் இருந்து கிராமங்களுக்கு வருவோரின் தகவல்களை கிராம அளவில் பாதுகாப்பு குழுவினர் அளித்து வருகின்றனர். ஆனால் நகர பகுதிக்கு வருவோரின் விவரங்களை கண்டறிய கடினமாக இருக்கிறது. இதற்காக தான் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர முக கவசம் அணியாமல் செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்வது நகர பகுதியில் அதிகமாக உள்ளது. முக கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இதை தற்போது தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு தனிமனிதனின் சமூக பொறுப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

Similar News