செய்திகள்
கொள்ளை

நகை அடகு கடையில் 7 கிலோ வெள்ளி கொள்ளை- மர்ம மனிதர்கள் கைவரிசை

Published On 2020-05-23 14:54 GMT   |   Update On 2020-05-23 14:54 GMT
பண்ருட்டி அருகே நகை அடகு கடையில் 7 கிலோ வெள்ளியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
பண்ருட்டி:

பண்ருட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவர் காடாம்புலியூரில் காட்டாண்டிக்குப்பம் சாலையில் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று காலை இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது கடையில் இருந்த 7 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 3½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அடகு கடை பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் இரவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News