செய்திகள்
கோப்புப்படம்

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அதிகரிப்பு

Published On 2020-05-22 08:42 GMT   |   Update On 2020-05-22 08:42 GMT
கடலூரில் 2 இடமும், சிதம்பரத்தில் 2 இடமும், விருத்தாசலத்தில் 4 இடம் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி ஆனது நடைபெற உள்ளது.
கடலூர்:

தமிழகத்தில் தொற்றுநோய் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு வருகிற மே 31-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் அனைத்து பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்தது.

மேலும் 10-ம் வகுப்பு தேர்வு வருகிற ஜூன் 15-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் நிறைவுபெற்ற பிளஸ்-2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

வருகிற 27-ந் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ள நிலையில் தற்போது விடைத்தாள்களை பிரித்து திருத்தும் மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் இடங்களுக்கு கிருமிநாசினிகள் தெளிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் என 3 இடத்தில் மட்டுமே இதுவரையில் 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வந்தது. ஆனால் ஆசிரியர்கள் சமூக இடைவெளி விட்டு அமரவேண்டும் என்ற உத்தரவு காரணமாக கடலூரில் 2 இடமும், சிதம்பரத்தில் 2 இடமும், விருத்தாசலத்தில் 4 இடம் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் இந்த விடைத்தாள் திருத்தும் பணி ஆனது நடைபெற உள்ளது.

மேலும் ஒவ்வொரு அறையிலும் இதுவரையில் 2 முதன்மை தேர்வாளர்கள் மற்றும் 2 கூற்று ஆய்வாளர் உள்ளிட்ட 12 உதவி தேர்வர்கள் என 16 பேர் இந்த விடைத்தாள்களை திருத்தும் பணியில் இதுவரை ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் ஒரு முதன்மை தேர்வுவர், ஒரு கூர்நோக்கு ஆய்வாளர் மற்றும் 6 உதவித் தேர்வர்கள் என 8 பேர் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

குறிப்பிட்ட நாட்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிக்கும் வகையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறும். வரும் ஆசிரியர்களுக்கு தேர்வு மையத்திலேயே கிருமி நாசினிகள், முகக்கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News