செய்திகள்
மீனவர்கள் படகுகள்

கடலூரில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை

Published On 2020-05-18 18:26 IST   |   Update On 2020-05-18 18:26:00 IST
கடலூரில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் வலைகள் மற்றும் படகுகள் சரிபார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:

வங்கக் கடலில் அம்பன் சூறாவளி புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் இன்று (18- ந் தேதி) முதல் 20 -ந் தேதிக்குள் மிகவும் கடுமையான சூறாவளி புயலாகவும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று கடலூர் துறைமுகம் பகுதியில் கடும் கடல் சீற்றம் காரணமாக பைபர் படகில் சென்ற மீனவர்கள் கடல் அலையில் சிக்கி படகு சேதமடைந்தது மீனவர்கள் உதவியோடு 3 பேர் உயிருடன் மீட்டனர்.

நேற்று நள்ளிரவு ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் துறைமுக பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கடலூர் துறைமுகத்தில் நேற்று வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் சூறாவளிப் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்த காரணத்தினால் கடலூர் துறைமுகத்தில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் கடல் பகுதிகளில் வழக்கத்தைவிட சீற்றமாக கடல் அலை காணப்பட்டது.

வானிலை மையம் அறிவுறுத்தியது போல் கடலூர் துறைமுகம், தாழங்குடா, தேவனாம்பட்டினம், ராசா பேட்டை, அக்கரை கோரி, சித்திரை பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவ கிராமத்தில் இருந்து யாரும் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை .

மேலும் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் தற்போது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல காரணத்தினால் அவரவர்கள் பகுதியில் மீன் வலைகள் மற்றும் படகுகள் சரிபார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News