வலிமையாக இருக்கிறேன்... வலிமையான கதைகளை தேர்வு செய்கிறேன் - பாவனா
- நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறேன்.
- என்னை யாரும் எளிதில் கணிக்க முடியாது என்ற ரீதியில் தான் பயணிக்கிறேன்.
'சித்திரம் பேசுதடி', 'வெயில்', 'அசல்' போன்ற படங்களில் நடித்த முன்னணி நடிகையான பாவனா, சில வருடங்கள் தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்தார். தற்போது மீண்டும் தமிழில் அவர் கதைகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாவனாவின் 90-வது படமாக தயாராகியுள்ள 'அனோமி: தி ஈக்வெஷன் ஆப் டெத்' என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் தடயவியல் நிபுணராக அவர் நடித்துள்ளார். ரகுமான், பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் திரிஷ்யா ரகுநாத் நடித்துள்ளனர். ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார்.
இதுகுறித்து பாவனா கூறும்போது, ''நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறேன். அந்தவகையில் பான் இந்தியா மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் நடித்துள்ளேன். தொடர்ந்து என் பயணம் நீளும்.
என்னை பொறுத்தவரை நான் வலிமையாக இருக்கிறேன். வலிமையான கதைகளை தேர்வு செய்கிறேன். என்னை யாரும் எளிதில் கணிக்க முடியாது என்ற ரீதியில் தான் பயணிக்கிறேன். சினிமாவில் என் பயணம் இன்னும் தூரமானது. அதை நோக்கி செல்கிறேன்'' என்றார்.