செய்திகள்
தற்கொலை

பண்ருட்டியில் முந்திரி தோப்பில் பிணமாக தொங்கிய பழக்கடை ஊழியர்

Published On 2020-05-18 17:27 IST   |   Update On 2020-05-18 17:27:00 IST
பண்ருட்டியில் இன்று காலை முந்திரி தோப்பில் பழக்கடை ஊழியர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பண்ருட்டி:

பண்ருட்டி காந்தி ரோட்டில் பழக்கடை வைத்திருப்பவர் குமார். இந்த கடையில் கொக்கு பாளையத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 19) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 13-ந் தேதி இவரது சொந்த ஊரான சேந்தமங்கலத்தில் சென்று வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு இவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தனர்.காடாம் புலியூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மலர்விழி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இன்று காலை பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் இவரது வேலை பார்த்து வந்த பழக்கடைகள் பின்புறம் உள்ள முந்திரி தோப்பில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டு பிடிக்கப்பட்டார்.

தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழக்கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News