செய்திகள்
கைது

காட்பாடி வாலிபர் கொலையில் 2 பேர் கைது

Published On 2020-05-11 17:46 IST   |   Update On 2020-05-11 17:46:00 IST
காட்பாடியில் கள்ளக்காதலியை துன்புறுத்திய வாலிபர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்:

காட்பாடி வஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 28). நேற்று விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பலாற்றங் கரையோரம் உள்ள விவசாய நிலத்தின் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீஸ் விசாரணையில் சுனிலை அவரது கள்ளக்காதலி வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்து ஆற்றங்கரையோரம் வீசிச் சென்றது தெரியவந்தது. மேலும் சுனிலின் கள்ளக்காதலி கோகிலா மாயமானார்.

டி.எஸ்.பி. துரைபாண்டியன் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். நேற்று மாலை இந்த கொலை சம்பந்தமாக ஆற்காட்டை சேர்ந்த மணிகண்டன் (28), காங்கேயநல்லூரை சேர்ந்த சதீஷ்குமார் (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மன்னார்குடியை சேர்ந்த இம்ரான் என்பவர் காட்பாடியில் டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரை கோகிலா காதல் திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் கோகிலாவுக்கு சுனிலுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக சுனில் கோகிலாவின் வீட்டிற்கு வந்து சென்றார். கடந்த சில நாட்களாக சுனில் கோகிலாவை அடித்து துன்புறுத்தினார். இதனால் கோகிலா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

அவருடைய கணவரின் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த மணிகண்டன், சதீஷ்குமார் இருவரும் சமீபத்தில் கோகிலாவை சந்தித்துள்ளனர். அப்போது சுனில் கொடுமை படுத்துவது குறித்து கோகிலா தெரிவித்துள்ளார். அவர்கள் கோகிலாவுக்கு உதவி செய்வதாக கூறியுள்ளனர்.

மேலும் சுனிலை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். சம்பவத்தன்று சுனில் கோகிலா வீட்டிற்கு வந்தார். இதுபற்றி மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோருக்கு கோகிலா தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த இருவரும் சுனிலை கத்தியால் வெட்டினர். அவர் உயிர் பிழைக்க வீட்டுக்குள் ஓடினார். விரட்டி, விரட்டி அவரை வெட்டி கொலை செய்தனர். பின்னர் கொலையை மறைப்பதற்காக சுனிலின் உடலை பாலாற்றங்கரையில் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

கோகிலா தனது வீட்டில் தரையில் படிந்திருந்த ரத்த கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.

போலிசார் தலைமறைவாக உள்ள கோகிலாவை தேடி வருகின்றனர். மணிகண்டன், சதீஷ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News