ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தினந்தோறும் அறுசுவை உணவு வழங்கும் அரிமா சங்கம்
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாதுரையில் செயல்படும் வைரம் அரிமா சங்கம் சார்பில் அதன் தலைவர் சஞ்சை தலைமையில் ஒருங்கிணைந்து முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள் அரசு அனுமதியுடன் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 300 ஏழைகளுக்கு அறுசுவை உணவுகளை வழங்கி வருகின்றனர்.
தினமும் சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பிரியாணி, முட்டை, வாழை பழத்துடன் வாகனத்தில் ஏற்றி கொண்டு ஏழை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். 45-வது நாளாக இன்றும் உணவு வழங்கினர்.
இதுபற்றி அரிமா சங்க தலைவர் சஞ்சை கூறியதாவது:-
உலகை புரட்டி போட்ட கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள், முதியோர்கள், நோயாளிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். பசியுடன் யாரும் இருக்ககூடாது என தினமும் மானாமதுரை பஸ் நிலையம், ரெயில் நிலைய ரோடு, மெயின் பஜார், வாரச்சந்தை, நான்கு வழிச்சாலை, மூங்கில் ஊரணி, சிப்காட், சிவகங்கை ரோடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு வழங்கி வருகிறோம்.
சில நாட்களுக்கு முன்பு மானாமதுரையைச் சுற்றியுள்ள ஏழை-எளிய குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் சமையல் பொருட்களை வழங்கி உள்ளோம். பொதுமக்கள் இதனை பாராட்டி தற்போது உணவு தயாரிக்க அரிசி வழங்கி வருகின்றனர் என தெரிவித்தார்.