செய்திகள்
கலெக்டர் பிரவீன்நாயர்

நாகை மாவட்டத்தில் 280 பேருக்கு பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளது- கலெக்டர் தகவல்

Published On 2020-05-04 20:31 IST   |   Update On 2020-05-04 20:31:00 IST
நாகை மாவட்டத்தில் 280 பேருக்கு பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:

கலெக்டர் பிரவீன்நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 2,304 பேரின் ரத்த மாதிரிகள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. திருவாரூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதேபோல காசிக்கு சென்று திரும்பிய வேளாங்கண்ணியை சேர்ந்த ஒரு நபருக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிக்கை வந்துள்ளது. நாகை மாவட்டத்தில் இதுவரை 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 42 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1,981 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 280 பேருக்கு பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News