செய்திகள்
வடமாநில வாலிபர்கள் முற்றுகை

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வடமாநில வாலிபர்கள் முற்றுகை

Published On 2020-05-03 15:57 IST   |   Update On 2020-05-03 15:57:00 IST
சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வடமாநில வாலிபர்கள் முற்றுகையிட்டனர்.

வேலூர்:

வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்கம் ஒடிசா, ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேர் வேலூரில் தங்கியுள்ளனர்.

லாட்ஜ்களில் தங்கியுள்ளவர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2,500 பேர் அனுமதி பெற்று கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் ஊருக்கு திரும்பி உள்ளனர். தற்போது உள்ள 7 ஆயிரம் பேரும் தங்கள் ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று 100-க்கும் மேற்பட்ட வடமாநில பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வட மாநிலத்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு இன்னும் அனுமதி வரவில்லை. அனுமதி கிடைத்த பின்னர் தான் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஆன்லைனில் அனுமதி சீட்டு பெற முடியும்.

அதற்கான அனுமதி சீட்டு கிடைத்தவுடன் நீங்கள் தங்கியுள்ள லாட்ஜ் உரிமையாளர்களுக்கு பாஸ் பெறுவதற்கான தகவல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு ஆன்லைன் மூலம் பாஸ் பெற்று சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்றார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ராணிப்பேட்டை பகுதியில் உள்ள வடமாநில ஜவுளி வியாபாரிகள் 14 பேர் நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் சொந்த மாநிலத்திற்கு செல்ல வாகன அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அவர்களிடம் ஆன்லைனில் விண்ணப்பிக்க கூறியும் அனுமதி வந்தவுடன் ஊருக்கு செல்லலாம் என கூறி அதிகாரிகள் அவர்களை அனுப்பி வைத்தனர்.

Similar News