ராணிப்பேட்டை அருகே என்ஜினீயரை கத்தியால் குத்தி கொன்ற மனைவி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பெல் ஊரகத்தில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் அகிலேஷ்குமார் சர்மா (வயது 37). ஜார்கண்டை சேர்ந்த இவர் ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் உதவி பொறியாளர் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார்.
இவரது மனைவி ஆஷாகுமாரி(27). இவர்களது மகன் அயோக்குமார் (5). இவர்களுடன் அகிலேஷ்குமாரின் தாய் சாவித்திரிதேவி வசித்து வந்தார்.
ஊரடங்கால் அகிலேஷ்குமார் சர்மா, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். அவரது மனைவி ஆஷாகுமரிக்கும் அவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மகன் அயோக்குமார் சரியாக சாப்பிடுவதில்லை என்று கூறப்படுகிறது. அவனுக்கு உணவு ஊட்டுவதில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆஷாகுமாரி கணவன் அகிலேஷ்குமார் சர்மாவை காற்கறி வெட்டும் கத்தியால் குத்தினார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து ஆஷாகுமாரியை போலீசார் கைது செய்தனர்.