செய்திகள்
கைது

மயிலாடுதுறை அருகே வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த வாலிபர் சிக்கினார்

Published On 2020-04-29 10:18 GMT   |   Update On 2020-04-29 10:18 GMT
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த வாலிபர் சிக்கினார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை கூறைநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 22). இவர், கடந்த 2 நாட்களாக தனது மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு ஆணை மேலகரம் ஊராட்சி மல்லியம் ரெயிலடி பகுதி வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி உள்ளார்.

பின்னர் ரஞ்சித், தன்னை ஒரு போலீஸ் என கூறி கொண்டு, வாகன ஓட்டிகளை மிரட்டி ரூ.500 வசூல் செய்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கொரோனா பரவுவதால் யாரும் வெளியே வரக்கூடாது என கூறி லத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த ஆணை மேலகரம் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி, குத்தாலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார், மேற்கண்ட பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அவர், வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.500 பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News