செய்திகள்
அமைச்சர் கந்தசாமி

ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் அரிசி வழங்க அமைச்சர் கந்தசாமி யோசனை

Published On 2020-04-28 19:48 IST   |   Update On 2020-04-28 19:48:00 IST
புதுவையில் இலவச அரிசியை ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக வழங்கலாம் என அமைச்சர் கந்தசாமி யோசனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கும் (அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் தவிர) இலவச அரிசி வழங்க அரசு முடிவெடுத்து அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.

தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி பேக்கிங் செய்யப்பட்டு அமைச்சக ஊழியர்கள் மூலம் குடிமைப்பொருள் வழங்கல் துறை உதவியுடன் பொதுமக்களுக்கு வீடு தேடி வழங்கப்படுகிறது. இப்பணி இன்னமும் முழுமை பெறாத காரணத்தினால், காலதாமதம் குறித்து சட்டமன்ற உறுப்பினர், பொதுமக்கள் தரப்பில் விவாதிக்கப்படுகிறது.

தற்போது வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள அரிசியை பேக்கிங் செய்யாமல் வழங்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அங்கன்வாடி ஊழியர்களை வீடு வீடாக சென்று ரேஷன் கார்டு குறித்து கணக்கெடுத்து அரிசி பெறுவதற்கான உரிய ரசீது வழங்கச்செய்ய வேண்டும். பின்னர் அந்தந்த பகுதியில் பள்ளிக்கூடம் அல்லது அரசு கட்டிடத்தில் வைத்து, வேலையில்லாமல் இருக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து இலவச அரிசியை வழங்கலாம்.

இதன் மூலம் பேக்கிங்கிற்கு ஆகும் செலவினை குறைப்பதுடன், ரேஷன் கடை ஊழியர்களுக்கு வேலை வழங்க ஏதுவாக இருக்கும். இம்முறையில் இலவச அரிசி வழங்குவதன் மூலம் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News