இந்தியா

கேரளாவில் கவடியார் அரண்மனையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் மாயம்- மூத்த உறுப்பினர் போலீசில் புகார்

Published On 2026-03-15 15:40 IST   |   Update On 2026-03-15 15:40:00 IST
  • பழமை வாய்ந்த புகழ்பெற்ற அரண்மனையில் இருந்து நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்தவர் அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய். இவர் புகழ்பெற்ற கவடியார் அரண்மனையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்கள் மற்றும் 15 ஊழியர்கள் அரண்மனையில் உள்ளனர். இங்கு அரச காலத்து புராதன நகைகள் உள்ளன. இதில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் மாயமாகி இருப்பதாக பேரூர்கடா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பழமை வாய்ந்த புகழ்பெற்ற அரண்மனையில் இருந்து நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நகைகள் கடந்த நவம்பர் மாதமே மாயமானதாக தெரிகிறது. இதுதொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியும் நகைகள் மாயமானது பற்றி தெரியவராதததால் தான் தற்போது போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரண்மனையில் உள்ள அலமாரியில் ஏராளமான நகைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் ரத்தினக் கற்கள் உள்ளிட்ட தங்க நகைகள் ஒரு இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த நவம்பர் மாதம் அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய் பெங்களூருவுக்குச் செல்வதற்கு முன்பு அலமாரியை திறந்தபோது நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக, அரண்மனையில் உள்ளவர்கள் அதை தங்கள் சொந்த உபயோகத்திற்காக எடுத்துச் சென்றார்களா? என்று குடும்ப உறுப்பினர்கள் விசாரித்து வந்தனர். யாரும் அதை எடுத்துச் செல்லவில்லை என்பது கண்டறியப்பட்டபோது, திருட்டு சந்தேகத்தின் பேரில் தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன பொருட்களில் பாரம்பரியமான மிகவும் அரிதான 12 நகைகள் அடங்கும் என்றும், மாயமான நகைகளின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி என்றும் கூறப்படுகிறது. அதே அலமாரியில் மற்ற மதிப்புமிக்க நகைகளும் வைக்கப்பட்டிருந்தன, அவை அப்படியே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News