செய்திகள்
கோப்பு படம்

குடியாத்தத்தில் கொரோனா வதந்தி பரப்பிய கல்லூரி மாணவரிடம் விசாரணை

Published On 2020-03-17 17:10 IST   |   Update On 2020-03-17 17:10:00 IST
குடியாத்தத்தில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பயம் ஆட்டிப்படைக்கிறது. மேலும் இது சம்மந்தமான வதந்திகளும் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.

குடியாத்தம்- பேரணாம்பட்டு ரோடு நாராயணசாமி தோப்பு பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் மற்றும் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டையை சேர்ந்த 22 வயது வாலிபர் ஆகியோரின் புகைப்படங்களை தனித்தனியாக வைத்து இந்த வாலிபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகவும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் வீடியோ கிளிப்பிங் பரவியது.

அதனை பார்த்த பாதிக்கப்பட்ட வாலிபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப்பில் இருந்த அந்த வாலிபர்களின் படத்தை எடுத்து வீடியோ கிளிப்பிங் தயாரித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். குடியாத்தம் அரசு மருத்துவமனை சார்பிலும் தவறான வதந்திகள் பரப்பி வருவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நகராட்சி ஆணையர் ரமேஷ், தாசில்தார் வத்சலா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த வீடியோ கிளிப்பிங் போலியாக தயார் செய்து அனுப்பியது நெல்லூர்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News