முக கவசம், கையுறை அணிந்து பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்கள்
வேலூர்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மதுக்கடை, பார்களையும் வரும் 31-ந்தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் நலன் கருதி அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 192 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நலன் கருதி, வேலூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகமே தனது சொந்த செலவில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை முன்னதாகவே வாங்கி வைத்து அவற்றை ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது.
அதன்படி முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை ஒரு மாதத்துக்கு தேவையான அளவுக்கு வழங்கியுள்ளது.
அவற்றை முறையாக பயன்படுத்தி முன் எச்சரிக்கையாக இருக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் முக கவசம், கையுறை அணிந்து மதுபாட்டில்களை விற்பனை செய்தனர்.