கறிக்கோழிகளை கொரோனா தாக்கியதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதியில் கறிக் கோழியை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக ‘வாட்ஸ்-ஆப்பில்’ பரவியது.
இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அது வதந்தி என்பது தெரிந்தது. ஆனாலும் கறிக்கோழிகளை வாங்க பொது மக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இதன் காரணமாக கோழிக்கறி விற்பனை சரிந்துள்ளது. நாட்டுக் கோழி, ஆட்டு இறைச்சி வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் நாட்டுக் கோழி விலை உயர்ந்து ரூ. 400 முதல் ரூ. 500 வரை விற்கப்படுகிறது.
இந்த நிலையில் கறிக் கோழிகளை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக வாட்ஸ்- அப்பில் வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கலெக் டர் மகேஸ்வரி கூறியதாவது:-
கறிக்கோழிகளில் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக சமூகவலை தளங்களில் பரப்பப்படுவது வதந்தி. இதனை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
வதந்தி செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்பக்கக்கூடாது. இதனை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையிலும் கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளது. கொரோனா வைரஸ் வதந்தி அனைத்து வாட்ஸ்-அப் குரூப்களிலும் பரப்பப்படுகிறது. இதனை பார்த்தவர்கள் கறிக்கோழிகளை வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.இதனால் இறைச்சி கடை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.