செய்திகள்
ஆலங்குடி அருகே விவசாயி வீட்டில் திருடியவர்கள் கைது
ஆலங்குடி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் துணிமணிகள் திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளத்தை சேர்ந்த வடிவேல் மகன் மகா கிருஷ்ணன் (வயது 26) விவசாயி. இவர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வயல் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகள் மற்றும் துணிமணிகள் திருட்டு போயிருந்தது.
அதிர்ச்சி அடைந்த மகாகிருஷ்ணன் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா தெற்கு மேலக்கோட்டையை சேர்ந்த வெற்றிவேல் (27), வளச்சேரிப்பட்டியை சேர்ந்த சத்தியமூர்த்தி (32), மற்றும் பாண்டியன் (32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.