அறந்தாங்கி அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கீழையூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 38). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
சம்பவத்தன்று அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்கு உடல் பரிசோதனை செய்ய தனது காரை எடுத்து கொண்டு சென்றார். அப்போது அவரின் உறவினர்கள் சித்ரா (30), ராதிகா (38), கனிமொழி (23), கோபிகா (8), சபரிஷ்வரன் (3), விக்னேஷ்வரன் (11), வரூன் (2) ஆகியோரும் காரில் புதுக்கோட்டை நோக்கி புறப்பட்டனர்.
அறந்தாங்கி அடுத்த குரும்பூர் ஒத்தகடை பகுதியில் செல்லும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிவந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.