செய்திகள்
ஆசிரியர் பிரேம்குமார்.

4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

Published On 2019-11-08 11:23 GMT   |   Update On 2019-11-08 11:23 GMT
மயிலாடுதுறை அருகே 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் ஆதி திராவிடர் நல தொடக்க பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர் பிரேம்குமார்.

இவர் 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் தொல்லை குறித்து யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் பயந்து போன மாணவி, இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதி மக்கள் இன்று பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்கு ஆசிரியர் பிரேம்குமாரை திடீரென பிடித்து தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிரேம்குமாரை பிடித்து மயிலாடுதுறை மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மாணவிக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பள்ளிக்கூடத்துக்கு பூட்டி போட்டு பூட்டினர்.

இந்த சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News