வேதாரண்யம் அருகே சினிமா தியேட்டரில் தகராறு- 6 பேர் படுகாயம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நாகை சாலையில் உள்ள சினிமா தியேட்டரில் நேற்று பிகில் திரைபடம் திரையிடப்பட்டது. இதை பார்ப்பதற்கு கோடியக்கரை மற்றும் புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்தவர்களும், பொது மக்களும் ஏராளமானோர் வந்திருந்தனர்.
திரைப்படம் ஓடி கொண்டிருந்த போது புஷ்பவனத்தை சேர்ந்த ஒருவர் ஜஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம்.
இந்த ஐஸ்கிரீம் கோடியக் கரையைச் சேர்ந்த ராஜ்குமார் (31) என்பவர் மீது பட்டதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் தரக்குறைவாக பேசி, கைக்கலப்பில் ஈடுபட்டனராம். இதில் ராஜ்குமார் தாக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுபாஷ் சந்திரபோஸ், சப்- இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், தமிழரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து புஷ்பவனத்தைச் சேர்ந்த முருகானந்தம் (26) என்பவரை கைது செய்தனர்.
மேலும் இதில் சம்மந்தப்பட்ட ரகுபதி, ராஜ்குமார் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ரகுபதி, ராஜ்குமார் ஆகியோர் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.