செய்திகள்
கைது

நாகை அருகே காரில் கடத்தப்பட்ட 716 மதுபாட்டில்கள் பறிமுதல் - வாலிபர் கைது

Published On 2019-10-24 11:25 GMT   |   Update On 2019-10-24 11:25 GMT
நாகை அருகே காரில் மது கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார் மற்றும் 716 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகப்பட்டினம்:

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொத்தகை மெயின் ரோட்டில் நாகூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன், திட்டச்சேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை நடத்தினர். சோதனையில் காரில் அட்டைப் பெட்டிகளில் 716 மது பாட்டில்கள் இருந்தன.

உடனே போலீசார் காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு தன்மார்கோவில் தெருவை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் மகேஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News