செய்திகள்
பலியான மாலா- காமராஜ்

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பலி- நாகூரில் சோக சம்பவம்

Published On 2019-10-24 10:12 GMT   |   Update On 2019-10-24 10:12 GMT
நாகூரில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் நாகூர் பெருமாள் கீழவீதியை சேர்ந்தவா காமராஜ்(வயது70) டெய்லர். இவரது மனைவி மாலா (65) இவர்களுக்கு சத்திய சீலன், கண்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். கண்ணன் சென்னையில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். சத்தியசீலன் பெற்றோருடன் வசித்து வந்தார்.

காமராஜிம், மாலாவும் மனமொத்த தம்பதியாக இருந்து வந்தனர். ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு செலுத்தி வந்தனர். இந்த நிலையில் காமராஜிக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் சுருண்டு விழுந்த அவரை மாலாவும், சத்தியசீலனும் ஒரு ஆட்டோவில் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் காமராஜ் மயங்கமடைந்தார். அவர் மூச்சு பேச்சில்லாமல் கிடந்ததை கண்ட மாலா அதிர்ச்சி அடைந்தார். கதறி அழுத அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட சத்தியசீலன் ஆட்டோவை வேகமாக ஓட்டி செல்ல வைத்து நாகை அரசு ஆஸ்பத்திரியை சென்றடைந்தார்.

அவர் டாக்டரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்ததும் காமராஜ், மாலாவுக்கு அவசர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த டாக்டர்கள் அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்துவிட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சத்தியசீலன் பெற்றோரின் உடல்களை நாகூருக்கு எடுத்து சென்றார். ஒரே நேரத்தில் தாய்-தந்தை இறந்து விட்டதால் “என்னை அதனாதையாக்கி சென்று விட்டீர்களே” என்று கதறி அழுதார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் உறவினர்கள், ஊர் மக்களும் காமராஜ் வீட்டில் திரண்டனர். சாவிலும் இணை பிரியாத தம்பதிகளின் அன்பை சொல்லி வியந்தனர். இந்த சம்பவம் நாகூர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதுபற்றி சென்னையில் வசிக்கும் காமராஜின் மகன் கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பெற்றோரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள புறப்பட்டு வருகிறார். அவர் வந்ததும் காமராஜ், மாலா உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்து அவர்களது இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News