செய்திகள்
வேலூர் அருகே லாரியில் கடத்திய 32 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
வேலூர் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து திருப்பத்தூரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபாலன், முருகேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு விரிஞ்சிபுரம் மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது வேலூரில் இருந்து வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் பிளாஸ்டிக் குழாய், ஒயர்களுக்கு இடையே 2 மூட்டையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர். அதில் 32 கிலோ கஞ்சா இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் திருப்பத்தூர் பொம்மிகுப்பத்தை சேர்ந்த விஜயகுமார் (33), அவரது அண்ணன் முருகன் (40) ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கொத்தவலசா பகுதியில் திருப்பத்தூரை சேர்ந்த இஸ்மாயில் (45) என்பவருக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இஸ்மாயில், விஜயகுமார், முருகன் ஆகியோரை கைது செய்தனர்.