பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம், நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
சத்தியமங்கலம், பவானி சாகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இன்று காலை பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 95.88 அடியாக இருந்தது. 25.617 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3578 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அரக்கன் கோட்டை, காளிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்களில் பாசனத்துக்கு 2100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.