சித்தோடு அருகே சுற்றுலா வேன் டயர் வெடித்து விபத்து - ஒருவர் பலி
சித்தோடு:
கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேன் மூலம் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பழனி போன்ற பகுதிகளுக்கு சென்றுவிட்டு கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில் வேன் சேலம், கோவை பைபாஸ் ரோட்டில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகில் உள்ள பச்சைப்பாளிமேடு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டயர் வெடித்துள்ளது. இதில், ரோட்டின் இடது பக்கம் உள்ள இரும்பு தடுப்பின் மீது மோதி வண்டி நின்றது.
இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று காயம் ஏற்பட்டவர்களை மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் கோவிந்தராஜ் (வயது 32) பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.