செய்திகள்
கைது

நடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்து கொன்ற கணவர் கைது

Published On 2019-09-27 14:31 GMT   |   Update On 2019-09-27 14:31 GMT
வாலாஜா அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை எரித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
வாலாஜா:

வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த தேவதானம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 60). வாலாஜாவில் கறிக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ஈஸ்வரி (47). இவர்களுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

முத்துவிற்கு ஈஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 24-ந்தேதி நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முத்து தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து வந்து ஈஸ்வரி மீது ஊற்றி தீ வைத்தார்.

இதில் தீக்காயம் அடைந்த ஈஸ்வரி வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதுபோல் தீக்காயம் அடைந்த முத்துவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி பரிதாபமாக இறந்தார். இவர் இறக்கும் முன்பு தன் கணவர் முத்து தான் என் இறப்புக்கு காரணம் என்று மரண வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து முத்துவை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News