செய்திகள்
டீசல் டேங்க் வெடித்ததில் தீப்பிடித்து எரியும் வேன்.

அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்: சகோதரர்கள் பலி

Published On 2019-09-11 10:10 GMT   |   Update On 2019-09-11 10:10 GMT
அரியலூர் அருகே விபத்தில் சகோதரர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமானூர்:

அரியலூர் மாவட்டம் கீழப்பழுர் பகுதியை சேர்ந்தவர் மொய்புல்லா மகன்கள் பயாஸ் (வயது 24), ஜமீம் (19). இவர்கள் இருவரும் இன்று காலை பெரம்பலூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

கீழப்பழுர்-சாத்தமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே பெரம்பலூரில் இருந்து தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை நோக்கி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள் வேனின் டீசல் டேங்க் மீது மோதியதால் டேங்க் வெடித்து வேன் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதையடுத்து வேன் டிரைவர் மற்றும் அதில் இருந்தவர்கள் சுதாரித்து செயல் பட்டு வேனில் இருந்து கீழே இறங்கி தப்பித்தனர். இதற்கிடையே வேன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த பயாஸ், ஜமீம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

வேன் மீது பற்றிய தீயானது பயாஸ் உடலில் பற்றியதால் அவர் உடல் கருகி பலியானார். தீப்பிடித்த வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. வேனில் பயணித்த சோமசுந்தரம், ஜோதி மணி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் கீழப்பழுர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News