செய்திகள்
விபத்து

ஏலகிரி மலையில் விபத்தில் புதுப்பெண் பலி

Published On 2019-09-06 10:36 GMT   |   Update On 2019-09-06 10:36 GMT
ஏலகிரி மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28) எலக்ட்ரீசியன். இவருக்கும் புதூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த திவ்யா (24) என்பவருக்கும் கடந்த 1-ந் தேதி வாணியம்பாடியில் திருமணம் நடந்தது.

புதுமணத் தம்பதி மோட்டார் சைக்கிளில் ஏலகிரி மலைக்கு வந்தனர். அங்கு உள்ள பூங்கா படகு குழாம் ஆகியவற்றை சுற்றி பார்த்துவிட்டு மாலை 6 மணிக்கு மலைப்பாதையில் வந்துகொண்டிருந்தனர். ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க மணிகண்டன் திடீரென பிரேக் போட்டு பைக்கை நிறுத்த முயன்றார். அந்த நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக் மலைப்பாதை தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த புதுப்பெண் திவ்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். புதுமாப்பிள்ளை மணிகண்டன் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் திவ்யா உடலை பார்த்து கதறி அழுதார். ஏலகிரிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புதுப்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான நான்கு நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News