ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 100-வது முறையாக ரெயிலில் குடிநீர்
ஜோலார்பேட்டை:
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரெயில் ஜூலை 12-ந் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது.
50 வேகன்கள் கொண்ட இந்த ரெயிலில் 25 லட்சம் (2.5 மில்லியன்) லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு கூடுதலாக மற்றொரு ரெயில் இயக்கப்பட்டு மேலும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்பப்பட்டது. அதன்படி 2 ரெயில்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஒரு தடவை ரெயிலில் குடிநீர் கொண்டு செல்ல ரூ.8.6 லட்சம் செலவாகிறது.
ஜூலை 12-ந்தேதி தொடங்கிய குடிநீர் ரெயில் இயக்கம் நேற்றுடன் 100-வது முறையாகும். நேற்று காலையில் ஒரு ரெயிலிலும் மாலையில் ஒரு ரெயிலிலும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
100 தடவை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டதில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் வெற்றிகரமாக சென்னைக்கு ரெயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
12-ந் தேதியில் இருந்து நேற்று வரை 250 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த குடிநீர் சென்னை மாநகர மேற்கு பகுதிகளில் சப்ளை செய்யபடுகிறது.