பாகிஸ்தானுக்கு ஆதரவாக தி.மு.க. பேசி வருகிறது: நாகையில் எச்.ராஜா பேட்டி
நாகப்பட்டினம்:
நாகையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பா.ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீருக்கு எதிர்க்கட்சிகள் அங்கு குழப்பம் விளைவிப்பதற்காகவே செல்கின்றனர். அவர்களை தடுத்து நிறுத்தியது அம்மாநில அரசின் சரியான செயல். தமிழகம் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 18 சதவீத இஸ்லாமியர்கள் நிறைந்த உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பங்கரவாத அச்சுறுத்தல் இன்றி அமைதியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ், தி.மு.க. போன்ற இந்து விரோத, தேசிய விரோத கட்சிகளினால் தான் தொடர் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க உதவியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஈழ வியாபாரிகள், தற்போது பாகிஸ்தான் ஆதரவு வியாபாரிகளாக மாறிய தன் விளைவு தான் தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக தி.மு.க. பேசி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து பா.ஜனதாவின் தமிழகத்தின் அடுத்த தலைவர் யார்? என்று அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ‘பா.ஜனதாவில் எந்த பதவிகளும் நான் கேட்டு பெற்றவை அல்ல. அனைத்து பதவிகளும் தானாக வந்தது போல் கட்சித் தலைமை எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் தான் ஏற்றுக் கொள்வேன்’ என்றார்.