செய்திகள்
வெடிகுண்டு மிரட்டல்

சவுதி அரேபியா செல்லும் சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2019-08-09 14:55 IST   |   Update On 2019-08-09 14:55:00 IST
சவுதி அரேபியா செல்லும் சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு பெண் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், “தனது பெயர் நஸ்ருதீன் என்றும், சேலம், ஓமலூரை சேர்ந்த சபீனா என்பவர் பயணம் செய்யும் சென்னையில் இருந்து டெல்லி வழியாக சவுதி அரேபியா செல்லும் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு வெடிக்கும்” என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுபற்றி டெல்லி போலீசார் உடனடியாக சென்னை போலீசுக்கும், சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சவுதி அரேபியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர். பாதுகாப்பு வீரர்களும் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது புரளி என்பது தெரிந்தது.

இதேபோல் மர்ம பெண் குறிப்பிட்ட ஓமலூர் முகவரியில் சபீனா என்று யாரும் இல்லை. அதுவும் போலியானது என்பது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் யார்? என்பது குறித்து அவர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்கனவே 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News