சீர்காழி அருகே மீனவர் வீட்டில் 60 பவுன் நகை- ரூ.1½ லட்சம் கொள்ளை
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல், சுனாமி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் இளையராஜா(வயது 32). மீனவர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் நடந்த தேர்த்திருவிழாவுக்கு சென்றார்.
நேற்று மாலை திருவிழா முடிந்த பின்னர் இளையராஜா தனது குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்க பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சீர்காழி போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் டில்லி பாபு, மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் கொள்ளை போன நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் என கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.