செய்திகள்
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் மீண்டும் கதிர் ஆனந்தை நிறுத்தியது திமுக

Published On 2019-07-06 07:25 GMT   |   Update On 2019-07-06 07:47 GMT
ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
சென்னை:

பாராளுமன்ற தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். ஆனால், பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டிருந்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்திருந்தது.



இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 11ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் திமுகவும் தனது வேட்பாளரை அறிவித்தது. ஏற்கனவே போட்டியிட்ட கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். எனவே, இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக கட்சிகளின் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவும்.
Tags:    

Similar News