செய்திகள்
கைது

கள்ளக்காதலியை சாலையில் இழுத்துச்சென்று அடித்து கொலை- தொழிலாளி கைது

Published On 2019-07-04 17:04 IST   |   Update On 2019-07-04 17:04:00 IST
சித்தூரில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலியை சாலையில் இழுத்துச் சென்று அடித்து கொலை செய்து உடலை ஏரியில் வீசிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சித்தூர்:

சித்தூர்-வேலூர் நெடுஞ்சாலையில் கங்கனேரு ஏரியில் ஒரு பெண் பிணம் கிடப்பதாக சித்தூர்-1 டவுன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஏரியில் பிணமாக கிடந்த பெண் சித்தூர் அம்பேத்கர்நகர் பகுதியை சேர்ந்த கரீம் என்பவருடைய மனைவி கவுசத் (35) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சித்தூரில் 12-ம் வகுப்பிலும் 2 வது மகள் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கரீம் கடந்த மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டார்.

கவுசத்துக்கும் சித்தூர் டெலிபோன் காலனியை சேர்ந்த கறிகடை தொழிலாளி காதர்பாட்ஷா (45) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இவர் கவுசத்தின் வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். திடீரென கவுசத், காதர்பாட்ஷாவை வீட்டிற்கு வர வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குடிபோதையில் காதர் பாட்ஷா கவுசத் வீட்டிற்கு வந்துள்ளார். ஆசைக்கு இணங்குமாறு கவுசத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த காதர் பாட்ஷா கள்ளக்காதலியான கவுசத்தை பலமாக தாக்கி சாலையில் தரதரவென இழுத்து சென்றார். இந்த சம்வபத்தை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதால் யாரும் முன்வந்து தட்டிகேட்கவில்லை.

இதற்கிடையே வெளியே சென்றிருந்த இரு மகள்களும் வீட்டுக்கு வந்து பார்த்தனர். வீட்டில் தாய் இல்லாததை கண்டு அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர். அப்போது காதர்பாட்ஷா, கவுசத்தை பலமாக தாக்கி இழுத்து சென்றதாக தெரியவந்தது. இதை கேட்ட உடன் இருமகள்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்நிலையில் கவுசத் ஏரியில் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு காதர் பாட்ஷா மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் தன்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்ததால் கவுசத்தை அடித்து கொன்று, பிணத்தை ஏரியில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News