செய்திகள்

அக்காள் மகனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை- நாகை கோர்ட்டு தீர்ப்பு

Published On 2019-06-27 14:06 GMT   |   Update On 2019-06-27 14:06 GMT
பணத்தை திருடியதை காட்டிக் கொடுத்த அக்காள் மகனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நிர்த்தன மங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜிம்மி கார்டர். இவரது மனைவி உஷா. இவரது மகன்கள் ராபர்ட் (12), ராபின், உஷாவின் தம்பி அந்தோணி சிறுவயது முதல் தனது அக்கா வீட்டில் வளர்ந்து வந்தார். 

கடந்த 2012-ம் ஆண்டு சாராயம் விற்ற வழக்கில் உஷா கைது செய்யப்பட்டு திருவாரூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் வைத்திருந்த 10 ஆயிரத்தை காணவில்லை என்று கடந்த 2012-ம் ஆண்டு ஜுலை மாதம் 24-ம் தேதி ஜிம்மி கார்டர் தேடினார். அப்போது பணத்தை அந்தோணி எடுத்தார் என்று ராபர்ட் கூறினார். இதனால் அந்தோணி ஆத்திரம் அடைந்தார்.  அன்றைய தினம் இரவு தூங்குவதற்காக அந்தோணி ராபர்ட், ராபின்ஆகிய 3 பேரும் சென்றனர். அப்போது ராபர்ட் கழுத்தை நெரித்து அந்தோணி கொலை செய்தார். 

இதை ராபின் பார்த்து விட்டார். உடனே நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொன்று விடுவேன் என அந்தோணி மிரட்டி உள்ளார். ஆனால் இந்த சம்பவம் குறித்து ராபின் தனது தந்தையிடம் கூறினார். 

இதுபற்றி ஜிம்மி கார்டர் வேளாங்கண்ணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தனர். இந்த வழக்கு நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது வழக்கை நீதிபதி பத்மநாபன் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தார். அவர் சிறுவனை கொலை செய்த அந்தோணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News