செய்திகள்
நாகையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி விதவைப்பெண்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையில் 300-க்கும் மேற்பட்ட விதவை பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். நாடாளு மன்றத்திலும் சட்டப் பேரவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட விதவைப் பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், விதவை பெண்கள் பாகுபாடு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், விதவைகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையினை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் விதவைப் பெண்களின் கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும், விவசாய தொழில் செய்யும் விதவைப் பெண்களுக்கு குறைந்தது 2 ஏக்கர் நிலம் அரசு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.