செய்திகள்

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து ராணுவ வீரர் பலி

Published On 2019-06-26 12:03 GMT   |   Update On 2019-06-26 12:03 GMT
ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து ராணுவ வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு:

திமிரி அடுத்த பல்லகுடிசை கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 39). ராணுவ வீரர், அவரது மனைவி விஜி (29). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும் 8 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

மனோகரன் பஞ்சாபில் உள்ள பட்டேலா என்ற பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் மனோகரன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிரிட கள வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த மின்கம்பத்தில் கையை வைத்தார்.

திடீரென மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததால் மனோகரன் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார்.

இதனை கண்ட அவரது மனைவி கதறி அழுதார். அருகில் இருந்தவர்கள் மனோகரனை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News