வேலூர்அருகே அம்பேத்கர் சிலை அவமதிப்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல்
வேலூர்:
வேலூர் அடுத்த பூதூர் எம்.ஜி.ஆர். நகரில் ஊர் பொதுமக்கள் சார்பில் அம்பேத்கர் முழு உருவ சிலை வைக்கபட்டுள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலையில் அவதூறு வாசகங்கள் அடங்கிய அட்டையை மாட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
இன்று காலை இதனை கண்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆத்திரமடைந்து, அணைக்கட்டு தொகுதி செயலாளர் கோட்டி (என்கிற) கோவேந்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் வேலூர் அணைக்கட்டு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த வேலூர் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், இன்ஸ் பெக்டர்கள் பார்த்தசாரதி, நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆவேசமாக கூறினர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கட்சியினர் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.