செய்திகள்

அறந்தாங்கி அருகே தந்தை-மகன் தனியார் பஸ் மோதி பலி

Published On 2019-05-30 16:27 GMT   |   Update On 2019-05-30 16:27 GMT
அறந்தாங்கி அருகே பெற்றோருக்கு சாப்பாடு கொண்டு சென்ற தந்தை-மகன் தனியார் பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் தோப்பு பட்டினச்சேரி பகுதியில் உள்ளது. அங்கு ராஜேந்திரனின் பெற்றோர் தங்கி விவசாயத்தை கவனித்து வருகிறார்கள்.

தினமும் அவர்களுக்கு ராஜேந்திரன் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பாடு கொண்டு சென்று கொடுத்துவிட்டு  வருவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு உணவு கொடுப்பதற்காக ராஜேந்திரன், தனது மகன் விக்னேஸ்வரன் (22) என்பவருடன் கீழையூரில் இருந்து பட்டினச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே அறந்தாங்கியில் இருந்து பெங்களூர் நோக்கி தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மேட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தந்தை, மகன் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்ததும் அங்கு வந்த அறந்தாங்கி போலீசார் பலியானவர்களின்  உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோருக்கு சாப்பாடு கொண்டு சென்ற தந்தை, மகன் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News