செய்திகள்

உசிலம்பட்டி அருகே பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளை

Published On 2019-05-24 10:40 GMT   |   Update On 2019-05-24 10:40 GMT
உசிலம்பட்டி அருகே பேராசிரியர் வீட்டில் 11 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் உள்ள ஏ.ராமநாதபுரத்தில் வசிப்பவர் கண்ணாடிச்சாமி. இவரது மகன் கல்யாணசுந்தரம் (வயது 29). இவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உடற் பயிற்சி பேராசிரியராக உள்ளார்.

கல்யாணசுந்தரத்தின் மனைவி ஜெயபிரதா பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் இரவில் ஆஸ்பத்திரியில் கல்யாணசுந்தரம் தங்கியிருந்தார்.

இன்று காலை கல்யாண சுந்தரம் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த 2 தங்கச்சங்கிலிகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

11 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக கல்யாணசுந்தரம் தெரிவித்த புகாரின் பேரில் கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News