செய்திகள்

மெரீனா கடற்கரையில் ராட்டினத்தில் சட்டை சிக்கியதால் சிறுவன் தவறி விழுந்து பலி

Published On 2019-05-21 06:41 GMT   |   Update On 2019-05-21 06:41 GMT
மெரீனா கடற்கரையில் சிறுவர்கள் விளையாடி மகிழும் ராட்டினத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கிறார்கள்.

அங்குள்ள சிறிய வகை ராட்டினங்களில் சிறுமி- சிறுவர்கள் ஏறி விளையாடி மகிழ்வார்கள்.

இந்த நிலையில் ராட்டினத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நொச்சி குப்பத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் மெரினா கடற்கரையில் சுண்டல் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பிரனவ் (7).

நேற்று மாலை சிறுவன் பிரனவ் தந்தை-தாயுடன் மெரீனா கடற்கரைக்கு சென்றான். அப்போது அங்கு ராட்டினத்தில் சிறுவர்கள் அமர்ந்து சுற்றுவதை ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தான். அவன் ராட்டினத்தின் மிக அருகில் நிற்பதை பார்த்த தாய் சற்று விலகி நிற்குமாறு கூறினார்.

இதை கவனித்த ராட்டினத்தின் உரிமையாளர் பிரகாஷ் என்பவர் சிறுவன் பிரனவ்வை அழைத்து சென்று ராட்டினத்தின் நடு பகுதியில் நிற்க வைத்தார். பின்னர் ராட்டினத்தை சுற்றினார்.

அப்போது எதிர்பாராத விதமாக பிரனவ் சட்டை ராட்டினத்தின் கம்பியில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி தவறி விழுந்த பிரனவ் தலையில் கம்பி பலமாக மோதியது.

பலத்த காயம் அடைந்த அவனை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராட்டினத்தை இயக்கிய பிரகாசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுவர்கள் விளையாடி மகிழும் ராட்டினத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மெரீனா கடற்கரையில் ராட்டினங்கள் உரிய அனுமதியின்றியும், பாதுகாப்பற்ற முறையிலும் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News