கோவையில் இருந்து கேரளாவுக்கு ரூ.21.35 லட்சம் ஹவாலா பணம் கடத்திய 2 பேர் கைது
கோவை:
கேரள கலால் பிரிவு ஆய்வாளர் ராகேஷ் தலைமையிலான தனிப்படையினர் பொள்ளாச்சி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாளையார் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு கார் கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. அதனை அதிகாரிகள் மறித்த போதும் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த கலால் பிரிவு அதிகாரிகள் காரினை பின் தொடர்ந்து சென்றனர்.
பின்னர் குருடிக்காடு என்ற இடத்தில் காரினை மடக்கினர். தொடர்ந்து அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அதனுள் கட்டுக்கட்டாக ரூ.21.35 லட்சம் ஹவாலா பணத்தினை பதுக்கி வைத்தி ருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.
இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காரில் வந்த நபர் தனது செல்போனை உடைத்து ஆவணங்களை அழிக்க முயன்றார். அதனை தடுத்து அதிகாரிகள் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அந்த செல்போனில் தங்க பிஸ்கட்டுகள், தங்க ஆயில் ஆகியவற்றின் போட்டோக்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் காரில் வந்த பாஜீவ்ராவ் (வயது 19). சுமித் ஜாவீர் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் தங்க ஆபரணங்கள் தயாரித்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் துபாயில் இருந்து கோழிக்கோட்டிற்கு விமானத்தில் தங்க கட்டிகளை கடத்தி வந்து, அதனை கோவையில் உள்ள பிரபல நகை கடையில் விற்றுள்ளனர். நகை விற்ற பணத்தினை காரில் கடத்தி சென்றபோது தான் கலால் துறை அதிகாரிகளிடம் இருவரும் சிக்கியுள்ளனர்.