செய்திகள்

வேன் மீது மோதி விபத்து- மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து 2 பேர் பலி

Published On 2019-05-13 12:00 GMT   |   Update On 2019-05-13 12:00 GMT
ஸ்ரீவைகுண்டம் அருகே வேன் மீது மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரை முந்தி செல்ல முயன்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம்:

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த சிலர் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று ஒரு வேனில் சென்றனர்.

வேனை கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதியை சேர்ந்த சுடலை (வயது42) என்பவர் ஓட்டி சென்றார். அந்த வேன் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்து வந்தவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான வாலிபர்களின் பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News