செய்திகள்

சகோதரரின் திருமண பத்திரிகை கொடுக்கச் சென்ற வாலிபர் பலி

Published On 2019-05-13 09:43 GMT   |   Update On 2019-05-13 09:43 GMT
கள்ளிக்குடி 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பேரையூர்:

திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், பெயிண்ட் கடை அதிபர். இவரது மகன் சுரேஷ்குமார் (25).

சகோதரர் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் விருதுநகர் சென்றார். அவருடன் கல்லூரி மாணவரான பிருத்விராஜ் (19) என்பவரும் சென்றார்.

கள்ளிக்குடி 4 வழிச்சாலையில் சென்றபோது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் சுரேஷ் குமார் மற்றும் பிருத்வி ராஜ் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்க முயன்றனர். ஆனால் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

பிருத்விராஜ் காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவகாசியைச் சேர்ந்த கார் டிரைவர் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.
Tags:    

Similar News