செய்திகள்
நத்தம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
நத்தம் அருகே காயங்களுடன் பிணமாக கிடந்தவர் விபத்தில் பலியான தொழிலாளி என தெரிய வந்துள்ளது.
செந்துறை:
நத்தம் அருகே உள்ள பூதகுடியை அடுத்த சுண்டக்காய்பட்டி விலக்கு பகுதியில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. பிணமாக கிடந்தவருக்கு சுமார் 53 வயது இருக்கும். அவர் வெள்ளை வேட்டி, சிவப்பு நிற சட்டை அணிந்திருந்தார். உடலில் நெற்றி, கால் உள்ளிட்ட இடங்களில் சிறு காயங்கள் இருந்தன.
இது தொடர்பாக நத்தம் போலீஸ் நிலையத்தில் பூதக்குடி கிராம நிர்வாக அலுவலர் சங்கிலி புகார் செய்தார். இதையடுத்து நத்தம் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் விசாரணையில் இறந்தவர் சேத்தூர் ஊராட்சி கணவாய்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பிச்சை (வயது53) என்பது தெரிய வந்தது. அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் பலியானதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.