செய்திகள்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் மணல் கடத்தல்: டிரைவர்-கிளீனர் கைது

Published On 2019-05-10 09:19 GMT   |   Update On 2019-05-10 09:19 GMT
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் மணல் கடத்திய டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் இன்று காலை சின்னம்பேடுஅகரம் கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுவாயலில் இருந்து சின்னம்பேடு நோக்கி ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று மின்னல் வேகத்தில் சென்றது. அந்த லாரியை போலீசார் விரட்டிச் சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் தவிடு மூட்டைகள் இருந்தன.

போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்க்க வேண்டும் என்று கூறினர். இதற்கு ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த லாரி டிரைவரான ரெங்கா செங்கையா (வயது 38), கிளீனர் லட்சுமைய்யா (25) ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதனால் போலீசாருக்கும் லாரி டிரைவர் கிளீனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர்,லாரியை போலீசார் திறந்து பார்த்தபோது தவிட்டு மூட்டைகளுக்கு இடையே ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த மணல் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

இதுபோல் பல ஆண்டு காலமாக சென்னைக்கு இவர்கள் மணல் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் லாரி டிரைவரையும், கிளீனரையும் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

டிரைவர் மற்றும் கிளீனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரி முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்ததினார்கள். தலைமறைவான ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News