திருப்பூரில் மூதாட்டியிடம் நகை பறித்த பனியன் தொழிலாளி கைது
திருப்பூர்:
திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கவுண்டர் வீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் அம்சவேணி (வயது 65).
சம்பவத்தன்று மதியம் இவர் கடையில் இருந்தபோது சிகரெட் வாங்குவது போல் வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் பதறிப்போன அவர் அம்சவேணி சத்தம் போட்டார்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து அந்த ஆசாமியை பிடித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் கண்டியன் குப்பத்தை சேர்ந்த கார்த்திக்(39) என்பதும், திருப்பூர் கருவம்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து பனியன் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்து அவரிடம் இருந்து 3 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.