செய்திகள்

மயிலாடுதுறை பகுதியில் குழந்தைகளுடன் 2 பெண்கள் மாயம்

Published On 2019-05-06 16:06 IST   |   Update On 2019-05-06 16:06:00 IST
மயிலாடுதுறை பகுதியில் குழந்தைகளுடன் 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை:

நாகைமாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடமட்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 34). இவருக்கு சுருதி (23) என்ற மனைவியும் பாலசுதர்‌ஷன் (4) என்ற மகனும் சுதர்ஷினி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 21-ம் தேதி சுதாகர் தனது வீட்டிற்கு சென்றபோது பாலசுதர்‌ஷன் மட்டும் அழுதுகொண்டே இருந்துள்ளான். சுருதி மற்றும் சுதர்ஷினி ஆகிய இருவரையும் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர் பாலையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலையூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள தத்தங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பிரவீன் (வயது 28). இவருக்கு அகல்யாதேவி (23) என்ற மனைவியும் ஹர்சன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். பிரவீன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த மாதம் 8-ம் தேதி மகன் ஹர்சனுடன் தாய் வீட்டிற்குச் செல்வதாகக்கூறி சென்ற அகல்யா தேவி மாயமாகி விட்டார். இதுபற்றி பிரவீனின் தாய் லலிதா பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News